வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: கோபம்

Thursday, September 24, 2009

கோபம்

''எதற்கெடுத்தாலும் கோபப்படுறதை முதல்ல நிப்பாட்டுங்க...'' என்றபடி அவன் தேடித்தேடி கடைசியில் கோபமடைய வைத்த நகவெட்டியை நீட்டியபடி சொன்னாள் சீதா.


''வச்ச இடத்துல இருந்தா நான் ஏன் கோபப்படப் போறேன்''

''ம்... நம்ம குழந்தைங்க சின்ன வயசுங்க. விளையாட்டுத்தனமாக எடுத்து எங்கயாவது போட்டுடுங்க... பொறுமையா தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது. இல்லைன்னா அதுகளை கூப்பிட்டு அனுசரணையா கேட்டா சொல்லப் போறாங்க...  அதவிட்டுட்டு வீடே ரெண்டாப் போற மாதியா கத்துறீங்க. உங்க அம்மா சொல்ற மாதி உங்களுக்கு மூக்கு மேல தாங்க கோபம் வருது. சரி... சரி... நகத்தை வெட்டிட்டு குளிச்சுட்டு வாங்க சூடா தோசை வார்த்துத் தாரேன்...''

''ம்... நகத்தை வெட்டிட்டு ஷேவ் பண்ணிட்டுத்தான் குளிக்கப்போறேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... ஆபிஸ்க்குப் போற மாதி பறக்குறே...'' என்றான் மீண்டும் கோபமாக.

''இப்பத்தானே சொன்னேன் அதுக்குள்ள எதுக்கு டென்ஷன். உங்களுக்கு லீவு தாங்க. ஆனா எனக்கு எல்லா நாளுமே ஒண்ணுதான். அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான் எனக்கு வேலை ஜாஸ்தி... தெரியுமில்ல... கொஞ்சம் சீக்கிரம் வாங்க''

''ம்... வர்றேன்...வர்றேன்...''

லுவலகத்தில் அவரவர் அரக்கப்பறக்க வேலை செய்து கொண்டிருந்தனர்.




''மிஸ்டர் சம்பத்... உங்களை எம்.டி. வரச் சொன்னார்'' என்றபடி வந்தார் எம்.டி.யை பார்த்துவிட்டு வந்த நாராயணன்.

''ம்... எதுக்கு...?''

''எனக்கென்னங்க தெரியும்... போய் பாருங்க...''

''மே ஐ கம் இன் சார்?''

''எஸ். கம் இன்''

உள்ளே நுழைய...

''வாங்க... சம்பத் உட்காருங்க...'' எம்.டி.

''தாங்க்யூ சார்'' என்றபடி அமர்ந்தான்.

''அந்த பான் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய கொட்டேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா...?''

''பண்ணிட்டேன் சார்...''

''ஓ.கே. அதை நம்ம பன்னீர்கிட்ட கொடுத்து ஒருதடவை சரிபார்த்துட்டு எங்கிட்ட தரச்சொல்லுங்க...''

''ஓ.கே. சார்...''

''அப்புறம் ஒரு விஷயம்.... நேத்து பியூன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டீங்களாமே...''

''ஆமா சார்... அவன் நடந்துக்கிட்ட விதம் அப்படி... காபி வாங்கிட்டு வந்து டேபிள் மேல வைக்கிறப்ப கொட்டிட்டான் சார். அப்ப எனக்கு வந்த கோபத்துல அவனை அறையணும் போல இருந்தது சார். ஆபிசாச்சேன்னு திட்டுனதோட நிறுத்திட்டேன்.''

''என்ன சம்பத்... வேணுமின்னா அவரு அப்படி செய்தாரு... ஏதோ கை தவறிடுச்சு... அவருக்கு உங்க உங்க அப்பா வயசிருக்கும் அவரைப் போயி அவன் இவன்னு விளித்துப் பேசுறது நல்லா இல்ல... பர்ஸ்ட் கன்ட்ரோல் யுவர் செல்ப்... கோபத்தை குறைங்க. நானும் உங்க வயசுல உங்களை மாதித்தான் கோபப்பட்டேன்... அதனால நான் எத்தனையோ இழந்தேன்.
அதுக்கப்புறமா எதுக்கு கோப்படுறோம்ன்னு தனிமையில யோசிச்சேன். அப்புறம் என்னை நானே மாத்திக்கிட்டேன்... இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கேன்னா அதுக்கு என்னை நானே மாத்திக்கிட்டது கூட ஒரு காரணம்... இப்ப நான் என்னோட அணுகுமுறையையே மாத்திக்கிட்டேன்.''

சந்துருவுக்கு மனசுக்குள் எவன் எவன் மீதோ கோபம் வந்தது. ஏன் தனக்கு முன்னால் லெக்சர் அடிக்கும் எம்.டி. மீது கூட கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு ''சாரி சார்... இனிமே இது மாதிரி நடக்காது சார்'' என்றான்.

''தட்ஸ் குட். அப்புறம் ஒரு விஷயம். இதை உங்க மனதைப் புண்படுத்தனும்ன்னு நெனச்சி சொல்லலை. உங்க கோபம் குறையணும்ன்னு தான் சொல்றேன். போன வாரம் நீங்க ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணி கொடுத்தீங்கல்ல ஞாபகம் இருக்கா... அதுல ரெண்டு மூணு இடத்துல மிஸ்டேக் இருந்தது... அதை உங்ககிட்ட கேக்காம நானே கரெக்ட் பண்ணி அனுப்பிட்டேன்...''

''சார்... என்னை கூப்பிட்டு சொல்லியிருக்கலாமே... கரெக்ட் பண்ணித் தந்திருப்பேனே. அது என்னோட தவறுதானே...''

''என்ன... உங்களை கூப்பிட்டு டோஸ் விடலையேன்னு கேக்குறீங்களா...? நான் கோபப்பட்டிருந்தா என்ன நடக்கும். அடுத்த தடவை நீங்க செய்யிற வேலையில அதிக சிரத்தை எடுக்கிறேன்னு தப்பு பண்ணிடுவீங்க... ஒரு தடவை தப்பு வர்றது சகஜம் தானே... உங்க வேலையில இதுவரைக்கும் தப்பே வந்தது கிடையாது. உங்க வேலையில நீங்க காட்டுற சிரத்தைய பார்த்து நான் நிறையத்தடவை பிரமிச்சிருக்கேன். நீங்க முதல் தடவை தப்பு பண்ணிருக்கீங்க. உங்க மனசில் ஏதாவது குழப்பம் இருந்திருக்கலாம். அதனால அதை நான் பெரிசா எடுத்துக்கலை''

சம்பத்துக்கு எங்கோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மனைவி, நண்பர்கள் என எல்லோரும் சொல்லியும் உறைக்காத ஏதோ ஒன்று உறைத்தது.

எம்.டி.யிடம் விடை பெற்று வெளியே வந்தவன் எதிர்ப்பட்ட பியூனிடம் 'ஸாரி' என்று கையைப் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் வியப்பாய் பார்த்தனர்.

-சே.குமார்
பரியன் வயல்.




(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)



2 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்ல நடை நண்பரே குறிப்பாக கதையின் ஆரம்பத்தில் வரும் உரையாடல்கள் அத்தனை லைவ்லியா இருந்தது.

நாடோடி இலக்கியன் said...

நண்பரே வேட் வெரிஃபிகேஷனை எடுத்துவிட்டால் பின்னூட்டுவதற்கு வசதியாக இருக்குமே.