வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: February 2010

Saturday, February 20, 2010

'ஆ'சிரியர்


போனில் அந்த செய்தியை கேட்டதும் என்னால் சீரணிக்க முடியவில்லை.

"டேய்... என்னடா சொல்லுறே.. நிஜமாத்தான் சொல்லுறியா..?" - பதறினேன்.

"ஆமாண்டா... சாரு இப்ப ஜெயில்ல இருக்காரு..."

"...." என்னால் பேச முடியவில்லை. அவனே தொடர்ந்தான்.

"பள்ளி நிர்வாகம் அவரு மேல நடவடிக்கை எடுக்கப் போறதா சொல்லுறாங்க."

"அவரு இந்த மாதிரி... எப்படிடா நம்புனாங்க... அவருக்காக யாருமே பேசலையாடா..?

"இல்ல மாப்ளே... சூழ்நிலை அவருக்கு பாதகமா அமைஞ்சிருச்சு... அதனால அவருக்காக பரிஞ்சு பேச யாருமே முன் வரலை."

"நீங்கள் எல்லோரும் என்னடா பண்றீங்க... புடுங்குறீங்களா... அவரை வெளிய கொண்டுவர முயற்சி செய்யாம..."

"இல்ல மாப்ளே... பாதிக்கப்பட்ட பொண்ணே போலீஸ்ல கேஸ் கொடுத்ததால ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு..."

"நிர்வாகத்திடம் பேசிப் பார்க்கலாமுல்ல..."

"இல்ல அவங்க யாரையும் உள்ள விட மாட்டேங்கிறாங்க."

"சரி வேற என்ன செய்யலாம்... சொல்லு"

"என்னத்தை மாப்ளே செய்யுறது. எல்லோரு மாதிரி நாமளும் இருக்க வேண்டியதுதான். உப்ப தின்னவன் தண்ணி குடிக்கத்தானே வேணும் மாப்ளே.."

"சீ... என்னடா பேசுறே... உப்பத் தின்னவன்தான் தண்ணி குடிக்கணும். அவரு ஏண்டா குடிக்கணும்."

"-----------"

"என்னடா பேச மாட்டேங்கிற... சரிடா நான் கிளம்பி வாரேன்..." என்றபடி போனை வைத்தேன்.

"சே... என்ன உலகம். யாருக்குமே துரோகம் நினைக்காத மனிதருக்காக போராட ஒருத்தர்கூட முன்வரலையே... அவருக்கிட்ட படிச்சு இன்னைக்கு எத்தனையோ பேர் நல்ல இடத்துல இருக்கோம். யாரையும் அடிக்காம அவர் பாடம் நடத்துற தன்மை... எல்லோருக்கும் உதவுற குணம்... அப்படிப்பட்டவரா இதுமாதிரி கீழ்தரமா நடக்கப் போறாரு..." மனசு வலித்தது.

அலுவலகம் சென்று இரண்டு நாள் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பினேன்.

"என்னடா... சொல்லாமக் கொல்லாம தீடீர்னு வந்து நிக்கிறே..."

"சும்மாதான் உங்களை பார்த்துட்டுப் போகலாமுன்னுதான்..."

"ஏண்டா பொய் சொல்லுறே... நாங்க வரச்சொன்னா ஏதோ உங்க பத்திரிக்கை ஆபிஸே உன்னாலதான் ஓடுற மாதிரி பேசுவே... இப்ப மட்டும் எப்படி எங்க மேல உனக்கு கரிசனம். எதாவது ஆபிஸ் வேலையா வந்திருப்ப..."

"இல்லம்மா... அவுக சாருக்காக வந்து இருக்கான்..." என்றபடி உள்ளே வந்தாள் தங்கை வனஜா.

"என்னடி சொல்லுறே..."

"ஆமாம்மா... கோவில்ல இருந்து வரும் போது ரமேஷ் அண்ணனைப் பார்த்தேன், சரவணன் வந்துட்டானான்னு கேட்டான். இன்னைக்கு எதுக்கு அவன் வாரான்னு நான் கேட்டப்ப அவன் தான் விசயத்தை சொன்னான்."

"என்னடா அதுக்காகவா வந்தே..?"

"ஆமாம்மா..."

"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?"

"என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கு அவர் கடவுள் மாதிரி... அவரை வெளியில கொண்டு வந்து அவரு நல்லவருன்னு எல்லோருக்கும் நிரூபிப்பேன்." என்றபடி உள்ளே சென்றேன்.

மேஷை கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.

பத்திரிக்கையாளன் என்பதால் எனக்கு தலைமை ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் பேசியதில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாருக்கு பாதகமாக அமைந்து விட்டதாக வருத்தப்பட்டார். அவரு இதுவரைக்கும் நல்ல மனிதர்தான் ஆனால் இப்ப நடந்த விஷயம்... யாராலயும் சீரணிக்க முடியவில்லை. அவரு மேல நடவடிக்கை எடுத்தாத்தான் எங்க பள்ளியோட பேரை காப்பாத்த முடியும். சாரி தம்பி உங்களுக்கு என்னால உதவ முடியாததுக்கு வருத்தப்படுறேன் என்று முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் அவரிடம் பேசி பயனில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையம் சென்றோம்.

"கேட்டியா... அவரு தப்பு பண்ணியிருக்காரு...யாருமே உதவ மாட்டாங்க. நீ தேவை இல்லாம அலையுறே...?" என்று கத்தினான் ரமேஷ்.

" இங்க பாரு நீ வாரதுன்னா வா... இல்லயின்னா பேசாம போயிடு..." எரிந்து விழுந்தேன். அதற்கு மேல் அவன் ஒன்றும் பேசவில்லை.

நான் பத்திரிக்கைகாரன் என்றதும் சாரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. அவரது மாணவன் நான் என்றும் தனிப்பட்ட முறையில் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்ததும் அனுமதி கிட்டியது.

சிறைக்கு உள்ளே எனது குரு அமர்ந்திருந்தார். எனக்கு அழுகை வந்தது.

"சா...சார்..." நா தழதழுத்தது.

"சரவணா... எப்ப வந்தே..? வா... ரமேஷ்..."

"காலையிலதான் வந்தேன்..."

"வீட்டுக்குப் போனியா... அம்மா என்ன பண்ணுறா...?"

"இல்ல போகலை... என்னால நீங்க இல்லாத வீட்டுல அம்மாவை மட்டும் தனியா பார்க்க முடியாது."

"---------"

"என்ன சார் இது. உங்க மேல வீண் பழி சுமத்தி... என்ன சார் நடந்துச்சு..."

"----------"

"பேசுங்க சார்... அப்பதான் நான் உங்களை வெளியில கொண்டு வந்து நிரபராதியின்னு நிரூபிக்க முடியும்.."

விரக்தியாக சிரித்தவர், "சரவணா நான் உங்கிட்ட தனியா பேசணும்..." என்றார்.

என் பார்வையை புரிந்து கொண்ட ரமேஷ், "சரி மாப்ளே... வண்டிக்கிட்ட நிக்கிறேன். வாரேன் சார்" என்றபடி கிளம்பினான்.

"சரவணா... என்னை மன்னிச்சுடு... " என்று கம்பிகளுக்கு உள்ளிருந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டார்.

"சா...ர்..."

"ஆமா சரவணா... நல்லவனா இருந்த எனக்குள்ளே கடந்த சில வருடமா சில மாற்றங்கள். புதுசா வேலைக்கு வந்த விஜி கூட தொடர்பு ஆயிட்டது. யாருக்கும் தெரியாம எங்களுக்குள்ள எல்லாம் நடந்துக்கிட்டிருந்தது. தீடீர்னு அவ வேலை வேணாமுன்னு எழுதிக் கொடுத்துட்டு எங்கயோ பொயிட்டா. எங்கிட்ட எதுவும் சொல்லலை. எனக்கு இருந்த நல்ல பேரால எனக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு வெளியில தெரியாமலே போச்சு. அவ போன பின்னால எனக்குள்ள காம உணர்வுகள் மேலோங்கி நிற்க ஆரம்பிச்சது. என்னால அதுல இருந்து மீள முடியலை. அதனால..."

"அதனால..." எனக்குள் கோபம் பீறிட்டது.

"ஏழாப்பு... எட்டாப்பு... கிளாஸ்ல பாடம் நடத்தும் போது பொம்பளைப் பிள்ளைங்களை தொடக்கூடாத இடத்துல எல்லாம் தொட்டு பாடம் எடுக்க ஆரம்பிச்சேன்..."

எனது பார்வை அவரிடம் இருந்து விலகி தரையை வெறிக்க ஆரம்பித்தது.

"அன்னைக்கு பள்ளி முடித்ததும் ஒருசில பேருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போயாச்சு... ஒருத்தி மட்டும் இருந்தா, அப்ப அவளோட இளமை எனனை..."

அதற்கு மேல் நிற்கப் பிடிக்காமல்... அவரையும் பார்க்கப் பிடிக்காமல் நடக்கலானேன்.

"சரவணா... நான்..."

அவரை சட்டை செய்யாமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினேன். எனக்குள் இருந்து சார் என்ற அந்த மிருகமும் வெளியேறி இருந்தது.

-'பரியன் வயல்' சே.குமார்




Saturday, February 13, 2010

மனசு


ந்த மனசு இருக்கே அது எதையாவது பிடிச்சா உடும்புப் பிடிதான் போங்க. காலையில எழும்போதே 'என்னவளே... அடி என்னவளே...' பாட்டு ஞாபகத்தில் வந்தால் அன்று முழுவதும் நம்மையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடலாக அதுதான் இருக்கும்.

அதுமாதிரிதாங்க இன்னைக்கு காலையில எழும்போதே பக்கத்து வீட்டு பரஞ்சோதி மாமா ஞாபகம் மனசுக்குள் மணியடித்துக் கொண்டிருந்தது.

எனக்கே ஆச்சர்யம். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை, பேசிக்கொள்வதில்லை. இருந்தும் அவர் ஞாபகம் மீண்டும் மீண்டும் மனசுக்குள்.

எங்காவது போகும்போது ரோட்டோரம் அழகான பொண்ணு போனாப் போதும், நம்ம அறியாமலே இந்த மனசு உடனே படம் பிடித்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்து உறங்கினாலும் அந்த முகத்தையே ஞாபகப்படுத்தி நம்மை ஒரு வழி பண்ணும். என்னதான் முயன்றாலும் மனதின் முன் நாம் தோற்றுவிடுவோம் என்பதே நிதர்சன உண்மை.

மனசு சம்பந்தமான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அம்மாவின் குரல். எழுந்து வெளியில் வந்தபோது அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மனசு எதிர் வீட்டு மாமாவை நினைவூட்ட எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கம் பார்த்தேன். சத்தியமா அவரைப் பார்க்கத்தாங்க நினைச்சேன். ஆனா அவரு மக நின்னா. பிளஸ் டூ படிக்கிறா. பல வருட சண்டையால அவ கிட்ட இதுவரை பேசியது கூட இல்லைங்க. என்னவோ நான் அவளை பார்க்கிறதா நினைச்சு உள்ள இருந்து வந்த பரஞ்சோதி மாமா 'அங்க என்னம்மா பண்றே..? கண்ட காலிப்பயலுக வேலியில ஓணானாட்டம் திரியிறானுங்க... உள்ள வா.' என்று சத்தம் போட்டார். எங்க வீட்டுப் பக்கம் நிக்கும் போதே காலிப் பயலாம். என்ன செய்ய, திட்டு வாங்கத்தான் மனசு அவர ஞாபகப்படுத்தியதோ என்னவோ. நல்லவேளை அப்பா காதுல விழலை என்று நினைத்த என் மனதுக்குள் பரஞ்சோதி மாமா மறைந்து அவர் மகள் உட்கார்ந்து கொண்டாள்.

காலேசுக்கு கிளம்பும்போது மறக்காமல் நான் எழுதிய முதல் கதையை எடுத்துக்கொண்டேன். என்னடா திடீர்னு கதை அது இதுன்னு போறானேன்னு நினைக்கிறிங்களா..?. இதுக்கும் மனசுதாங்க காரணம்.

போன வியாழக்கிழமை சவரிமுத்து ஐயா தமிழ் வகுப்பு எடுத்தப்ப யார் யாரு கதை, கவிதை எழுதுவிங்க என்று கேட்டார். பதிப்பேர் கையை தூக்க நான் உட்பட சிலர் கை தூக்கவில்லை. நமக்கு தெரியலைன்னா என்னங்க பண்ணமுடியும்.

அவரு எல்லாரையும் விட்டுட்டு என்னய பார்த்து 'என்ன சார், நமக்கு எதுவுமே வராது படிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். எதுக்குத்தான் வர்றோமோ. பாவம் பெத்தவங்க.' என்றார் நக்கலாக. வகுப்பே கொல் என்று சிரித்தது. குறிப்பா மல்லிகா சிரிப்பு மட்டும் தனியா கேட்டது. ரெண்டு நாளா இந்த மனசு வேற அவ சிரிச்சதையே ஞாபகப்படுத்தி கஷ்டப் படுத்திருச்சுங்க.

சை... எல்லாரு முன்னாலயும் அவமானப்படுத்திட்டாரே. அதுவும் மல்லிகா முன்னால வச்சு கேவலப்படுத்திட்டாரே... அவரே எல்லாரு முன்னாலயும் புகழனும் அதுக்கு ஒரே வழி கதை எழுதுறதுதான் என முடிவு செய்து ரெண்டு நாளா யோசிச்சு நேத்து காலையில கம்மாக்கரையில உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன். அதை இன்னைக்கு அவர்கிட்ட கொடுக்கணும்.

மாமாவையும் மாமா மகளையும் மறந்த மனசு சவரிமுத்து ஐயாவையும் மல்லிகாவையும் பற்றிக் கொண்டது.

நேராக தமிழ்த்துறைக்குச் சென்று ஐயாவிடம் கதையை நீட்டினேன். என்னப்பா இது..? என்று புருவம் உயர்த்தினார். 'கதை' என்றேன். ஓற்றைச் சொல்லில். என்னை ஏற இறங்க பார்த்தார். 'சரி படிச்சுட்டு கருத்தை சொல்லுறேன். மதியம் வந்து பாரு' என்றார்.

'உங்க கருத்தை நான் தனியா கேட்க விரும்பலை. நீங்க உங்க வகுப்புல எல்லாரு முன்னாலயும் சொல்லுங்க. கேவலப்படுத்துறப்ப மட்டும் தனியா வரச்சொல்லியா பண்ணினிங்க.' என்றேன்.

'ம்... தனியா சொல்றது உனக்கு நல்லதுன்னு பார்த்தேன். அப்புறம் உன் இஷ்டம்.' என்றார். 'பரவாயில்லை' என்று கிளம்பினேன்.

நம்ம கதைய படிச்சுட்டு ஐயா நல்ல கருத்தை வகுப்பில சொல்லட்டும் அப்புறம் பாரு மல்லிகாவை என்ன பண்ணுறேன்னு. அவளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே என் கதையின் நாயகி பேர மல்லிகான்னு வச்சேன்.

மதியம் முதல் பிரிவேளை தமிழ் ஐயா வந்தார். வந்தவர் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனது கதை பற்றி எதுவும் கூறவில்லை. மனசு சொல்லுவாரா மாட்டாரான்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பாடத்துல எப்பவும் கவனம் போகாது. இன்னைக்கு சுத்தமா இல்ல. அடிக்கடி என்னய பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். அவரு மேல கடுப்புதான் வந்தது.

பத்து நிமிடம் இருக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி செல்வம், ஒரு கதை எழுதி எங்கிட்ட கொடுத்து படிச்சு கருத்துச் சொல்லச் சொன்னார். அதுவும் வகுப்புலதான் சொல்லணுமுன்னு கேட்டுக்கிட்டார் என்றதும் எல்லோரும் என்னய திரும்பிப் பார்த்தனர்.

மல்லிகா மட்டும் நக்கலாக சிரித்தாள். அவளுக்கு எப்பவுமே எல்லாத்திலும் தானே முதல் என்ற கர்வம் உண்டு. அவ நல்லா கதை, கவிதை எழுதுவா. கல்லூரியில வர்ற எல்லா கையெழுத்துப் பிரதியிலயும் எழுதுவா. அழகா வேற இருப்பாளா தேடி வந்து கதை வாங்குவாங்க. அதனால நாம கதை எழுதினா அவளுக்கு நக்கலாத்தான் தெரியும்.

ஐயா தொடர்ந்தார், 'முதல்ல கதை எழுதணுங்கிற அவரோட ஆர்வத்தை பாராட்டுறேன் என்றதும் நான் மத்தவங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தேன். 'ஏம்மா மல்லிகா... சமீபத்துல மூன்றாம் பிறை படம் போட்டானா..?' என்று வினவ, நம்ம கதைக்கும் இவரு கேக்குற கேள்விக்கும் என்ன சம்பனந்தம்? என்ற என் யோசனையை மல்லிகாவின் பதில் களைத்தது. 'ஆமா ஐயா... வியாழக்கிழமை கே டிவியில போட்டான்.

'ம். அதானே பார்த்தேன். யாரும் படம் பாக்கலைன்னா இந்த கதைய வாங்கி படிங்க. பேர் மாற்றத்தோட கதை அப்படியே மாற்ற்மில்லாம இருக்கு. ஆத்திரப்பட்டா மட்டும் போதாது தம்பி, சுயமா சிந்திச்சா கண்டிப்பா நல்ல கதை உங்களாலயும் எழுத முடியும்.' என்றார். உடனே வகுப்பு முழுவதும் கோரஸாக கத்தியது.

எனக்கு என்னவோ போலாகி விட்டது. சே... இந்த மனசு இப்படி கேவலப்பட வச்சுடுச்சே. கதை எழுதணுமுனு நினைச்சு உட்கார்ந்தப்ப, பார்த்த படத்தோட கதைய அப்படியே ஞாபகப்படுத்தி... சை... நன்றி கெட்ட மனசு. யார் முகத்திலும் முழிக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டேன்.

'எல்லாருக்கும் ஓண்ணு சொல்லுறேன். யாருக்காகவும் எழுதாம நீங்களா முயலுங்கள். கண்டிப்பா உங்க திறமை வெளிப்படும். அப்புறம் நம்ம கல்லூரியில ஒரு சிறுகதைப் ப்ட்டறை நடக்கப் போகுது. நிறைய கல்லூரியில இருந்து பசங்க கலந்துக்க இருக்காங்க. அதுக்காக நம்ம கல்லூரியில கதை தேர்வு நடக்க இருக்கு. அது தொடர்பான சுற்றறிக்கை முதல்வர்கிட்ட இருக்கு. விரைவில் உங்களுக்கு வாசிக்கப்படும். நல்ல கதையா குடுங்க. நம்ம மல்லிகா பொருளாதார பசங்க நடத்துற மனசு பத்திரிக்கையில இந்த மாதம் எழுதியிருக்க ஜன்னலோர ரோஜா அருமையான கதை. அம்மா மல்லிகா, அதையே கொடு. கண்டிப்பா பட்டறைக்குப் பிறகு நடக்கப்போற கதை தேர்வுல முதல் கதையா வரும்.' என்று எனக்குள் கனன்ற கோபத்திற்கு எண்ணெய் வார்த்துச் சென்றார்.

மனசு முழுவதும் மல்லிகா ஆக்கிரமித்தாள். வேறு எதை நினைத்தாலும் மனசு அவளிடமே வந்து நின்றது. சே... வெட்கம்கெட்ட மனசே அவளை நினைப்பதை நிறுத்து என மனசோடு சண்டையிட்டேன். ஆனால் ஜெயித்தது என்னவோ மனசுதான்.

அடுத்த பிரிவேளையை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தால் அம்மா, 'ஏண்டா, வரும்போது அக்கா வீட்டுக்குப் போயி விதை நெல்லு மூட்டை தூக்கியாரச் சொன்னேனே. தூக்கியாரலயா..?' என்று கோபமாக கேட்க, காலையில் கிளம்பும் போது அம்மா சொன்னது இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது. எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் மனசு இதை மட்டும் மறந்துவிட்டதே. என்ன மனசு இது என்று மனசை திட்டினேன்.

'அவருக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கப் போகுது. பக்கத்து வீட்டுப் பக்கமுல்ல ஞாபகம் போகுது.' படுத்திருந்தபடி அப்பா சொல்ல, ஏனோ தெரியவில்லை பரஞ்சோதி மாமாவும் அவரது மகள் யாழினியும் மனசுக்குள் மணியடித்தனர்.

-சே.குமார்




Wednesday, February 3, 2010

குடும்ப விளக்கு



காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளாதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை ஒரு அரை அறைந்துவிட்டு "எவனவது கொடுப்பாண்டி... வந்து வச்சுக்கிறே..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல பொயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கனும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்... எல்லாம் மாரி செயல்...' வழியும் கண்ணீரைத் துடைத்தபடி வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் புரவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்க."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயை கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டானா... மூணு பேரையும் பொம்பளைப்பிள்ளையா வேற படைச்சுட்டான்.என்ன விட்டா அவங்களுக்கு செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும்.நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளளு"

"பணம் வந்ததும் முதல்ல் ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புரம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா...அம்மா உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா. பல பேருக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல் வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான். எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா. என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள் வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோன். என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே.அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... 'வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது. இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிரு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்கிது." என்று தோழி ஒருத்தி ஆறுதல் சொல்ல, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

-சே.குமார்

******