வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: March 2010

Sunday, March 28, 2010

அவனும்... அவளும்...

(ஒரு பக்க சிறு 'கதை' முயற்சி. முயற்சி திருவினையாக்குமா என்பது உங்களது மதிப்புமிக்க கருத்தில்தான் உள்ளது.)


செல்பேசி ஒலிக்கவும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு செல்பேசியை எடுத்துப் நம்பரைப் பார்த்தவன், "என்னடி இந்த நேரத்துல பண்ணுறே..?" என்றான்.

"சும்மாதாண்டா" என்றது எதிர்முனை பெண் குரல்.

"சும்மா பேச இதுவா நேரம்... நாளைக்கு எனக்கு செமினார் இருக்கு. அதுக்காக பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். காலையில காலேஜ்ல பார்க்கலாம்..."

"நாளைக்கு உனக்கு செமினார் இல்லடா...."

"என்னடி சொல்றே... நீ என்னவோ பிஸிக்ஸ் புரபஸர் பாலுச்சாமி மாதிரி பேசுறே... உனக்கு ஹாஸ்டல்ல பொழுது போகலைங்கிறதுக்காக ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி வெறுப்பேத்துறியா..?"

"உனக்கு நல்லது சொன்னா கேட்கமாட்டே... ராத்திரிப் பூராம் முழிச்சு பக்கம் பக்கமா எழுதிக்கிட்டு வா எனக்கென்ன..?"

"சரிடி... சொல்லித்தொலை... நாளைக்கு என்ன..?"

"நாளைக்கு பிகாம் பசங்க அவங்க புரபஸருக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். எல்லா ஸ்டூடண்டஸும் கலந்துக்கணுமாம். அதனால நாளைக்கு காலேஜ் இருக்காது"

"இத உனக்கு இந்த நேரத்துல யாருடி சொன்னா..?"

"என் ரூம்மெட் சித்ரா இருக்கால்ல அவளோட ஆளு இப்பத்தான் போன் பண்ணி சொன்னான். ராத்திரி பனிரெண்டு மணிக்கு முச்சந்தியில கூடி முடிவு பண்ணிணாங்களாம். யாருக்கும் தெரியக்கூடாதாம்"

"என்னடி எதேதோ சொல்லுறே...? உண்மைதானா... நம்ப முடியலையே...?"

"நம்புனா நம்பு... எனக்கென்ன... எங்க பிரண்ட்ஸ் எல்லாம் படத்துக்குப் போகலாமுன்னு முடிவு பண்ணியிருக்காளுங்க... நீயும் எங்கூட வந்தியனா எனக்கு சந்தோஷமா இருக்கும்... அதனாலதான் போன் பண்ணினேன். நம்பலைன்னா ராத்திரி பூராம் பிரிபேர் பண்ணிட்டு காலையில வீட்டுல கிடந்து தூங்கு... எனக்கென்ன... எல்லாரும் அவ அவ பாய் பிரண்டோட வருவாளுங்க... நா மட்டும் ஒத்தையா போறேன்..." எதிர்முனை கோபப்படுவது போல் பேச...

"சரி... சரி... நாளைக்கு ஸ்டிரைக்தானே... காலையில நான் உன்னைய உங்க ஹாஸ்டல்கிட்ட வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்... ஓகே..."

"நீ காலேசுக்கிட்டயே வா... எல்லாரும் அங்க அசம்பிள் ஆகித்தான் போறாளுங்க...."

"சரிடி... தாங்க்ஸ்டி"

"சரி படுத்து தூங்கு குட் நைட்"

"ஒகே... சீ யூ டுமாரோ..."

போனை வைத்தவன் புத்தகத்தை தூக்கிப் போட்டான். \அப்பா நாளைக்கு செமினார் இல்லைன்னா அடுத்து ரெண்டு நாள் லீவு, அப்புறம் திங்கள்கிழமை செகண்ட் டே ஆர்டர்தான் பிஸிக்ஸ் கிளாஸ் இல்ல. இனி புதன் கிழமைதான்...

நாளைக்குப் பூராம் நம்ம ஆளுகூட என்சாய்தான்' என்று நினைத்தபடி படுக்கையில் விழுந்தான்.

அதே நேரம்...

அந்த தனியார் பெண்கள் விடுதியில்...

போனை வைத்த ஹரிணியிடம், "ஏண்டி அவங்கிட்ட இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டே... பாவன்டி அவன்... நாளைக்கு பாலுச்சாமி சார்கிட்ட மாட்டப் போறான்..."

"மாட்டட்டும்... முண்டம்... சாயந்தரம்தான் அவங்கிட்ட சேலஞ் பண்ணினேன் அதுக்குள்ள மறந்துடுச்சு... நாளைக்கு எங்கூட சுத்தலாங்கிற சந்தோஷத்துல இந்நேரம் தூக்கம் வராம புரண்டுக்கிட்டு கிடக்கும் கிடக்கட்டும்..." என்றபடி எழுந்து காலண்டரில் தேதியை கிழித்தாள்.

அதில் ஏப்ரல் 1, வெள்ளிக்கிழமை என்று இருந்தது.
 
-'பரியன் வயல்' சே.குமார்.





Sunday, March 14, 2010

மழலை இதயம்


"அப்பா..."

"என்னம்மா"

"நம்ம தாத்தா பெர்த்டே எப்போ?"

"அதெல்லாம் யாருக்குத் தெரியும்..."

"ப்ளீஸ்ப்பா... சொல்லுங்க... தாத்தா பெர்த்டே எப்போ?" அழுத்தமாக கேட்டாள் சுவாதி.

"நிஜமாலுமே எனக்குத் தெரியாதுடா... தாத்தாவுக்கே தெரியாதும்மா"

"பொய் சொல்லாதேப்பா... எம் பெர்த்டே, தம்பி பெர்த்டே, அம்மா பெர்த்டே எல்லாம் கரெக்டா, மறக்காம வச்சிருக்கீங்க... தாத்தா பெர்த்டே மட்டும் தெரியாதுன்னா எப்புடிப்பா..?"

மழலையாக கேட்டாலும் மனதை தைத்தது. இதற்கு மேல் தெரியாது என்றால் இன்னும் என்னவெல்லாம் கேட்பாளோ என்ற பயத்தில் ஏப்ரல் இருபதுதான் தாத்தா பிறந்தநாள் என்று சட்டென்று மனதில் உதித்த நாளைச் சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் சிவா.

"ஐய்யா... இன்னைக்கு ஏப்ரல் 17, 18... 19... 20... விரல் விட்டு எண்ணி இன்னம் திரி டேய்ஸ்தான் இருக்கு தாத்தா பெர்த்டேக்கு... அப்பா சூப்பரா கொண்டாடலாம் தாத்தா பெர்த்டேய... ம்..."

"ஒ.கே".

ஏப்ரல்-20 காலை.

"அப்பா... நான் காலையிலயே தாத்தாவுக்கு விஷ் பண்ணிட்டேன். நீங்களும் அம்மாவும்தான் பண்ணலை... ஈவினிங் கேக் வாங்கிக்கிட்டு வாங்க..."

மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறாளே... என்று நினைத்தபடி "சரி... இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு பஸ் வர்ற நேரமாச்சு..." என்று அவளை விரட்டினான் சிவா.

மாலை 6.30 மணி.

சிவா வரும்போது வாசலில் அவன் வரவுக்காக கன்னத்தில் கைவைத்தபடி காத்திருந்தாள் அவனது மகள்.

"ஹை... அப்பா வந்தாச்சு..." அவனைப் பார்த்ததும் கைதட்டி சிரித்தாள்.

அவன் அலுவலக கோப்புகள் அடங்கிய சூட்கேஸை மட்டுமே சுமந்து வருவது கண்டு அவளது முகத்தில் சிரிப்பு அலை குறையத் தொடங்கியது.

"அப்பா..."

"என்னம்மா..." களைப்பாய் கேட்டான்.

"வாங்கலையா..."

"என்னது..?"

"தாத்தா பெர்த்டே கேக்..."

"சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன்..."

"பொய் சொல்றீங்க... வண்டி பெட்டியில இருக்குதானே..."

"இல்லடா... நிஜமாலுமே மறந்துட்டேன்..."

"போங்கப்பா... எங்க பெர்த்டேக்கு மட்டும் மறக்காம பெரிய்ய கேக் வாங்காருவிங்க... நாங்க கேக்காம எல்லாம் வாங்காருவீங்க... தாத்தாவுக்கு மட்டும் எதுவுமே வாங்க மாட்டீங்க... தாத்தா கண்ணாடி மாத்தணும்முன்னு கேட்டப்போ இருக்கதைப் போடுங்க போதும்... அப்புறம் பாக்கலாம்ன்னு சொன்னீங்க. தாத்தா எதாவது கேட்டா அம்மாவும் செய்யிறதில்லை. நாங்க தப்பு செய்தாலும் தாத்தாவைத்தான் திட்டுறாங்க... நமக்கு எதாவதுன்னா தாத்தா துடிச்சுப் போயிடுறாங்க... ஆனா நீங்க அவங்களை ஏப்பா வெறுக்கிறீங்க... " என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுசிபோல் அவள் பேசிக் கொண்டே போக...

சிவாவின் மனதுக்குள் அவளது வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது. 'இவளை நாம் வளர்ப்பது போல்தானே அவர் நம்மை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்திருப்பார். நமக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும். சிறியவளாக இருந்தாலும் எப்படி பேசுகிறாள். தவறு செய்துவிட்டோமே... அவளின் ஆசையை நிறைவேற்றுவது சாதாரண விஷயம்தானே... அவருக்கும் என்னை விட்டால் யார் துணை... இத்தனை நாளாக ஏன் இப்படி இருந்தேன். சை... படித்தும் முட்டாளாய் இருந்திருக்கிறேன். அவளுக்கு இருக்கும் இதயம்கூட எனக்கில்லாமல் போச்சே...' என்று மனதிற்குள் தனது செயலை நினைத்து வருந்தியவன், மகளின் அருகே அமர்ந்து அவளை கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன். வா நாம கடைக்குப் போய் கேக் வாங்கி வரலாம்" என்றான்.
 
'பரியன் வயல்' சே.குமார்




Sunday, March 7, 2010

பிறவிக்குணம்

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன.மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான்... அதுவரைக்கும் மிம்சாரம் வர வாய்ப்பேயில்லை. அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.
'சே... இந்த மழை நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.
தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கம்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.
வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்படி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழை விட்டதும் ஏரக் கட்டப் போறான்.நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் தலையெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.
"எதுக்கு இப்ப கத்துறே... பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.
வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார்.
மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது. "என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..? வீட்டிற்குள் இருந்து புகையிலை குதப்பி வாயில் எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.
"அந்த சனியனைத்தான் துப்பிட்டு பேசுறது" வெடித்தாள் ராமாயி.
"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... குளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒருசில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.
"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழைக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.
"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."
"யாரு கண்டா... இந்த மழையில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது..."
"உனக்கு நல்ல பேச்சே வராதா..?"



"மாணிக்கண்ணே..."
"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"
"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.
"அடி ஆத்தாடி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.
"தலையில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.
வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர். .
ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.
மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"
"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..."
ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.
"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."
"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."
ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.
மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனைஞ்சுட்டு வந்தா நாளைக்கு காய்ச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது.ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்ச இவுகளும் படுத்துறாக... போகயிலயே தலைதலையா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எ இந்த தலையெழுத்து..." என்று எதேதோ பேச, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.
ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என்று எல்லாம் ஒன்றாய்...
அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழை விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளிப்பாட்டிட்டு கொள்ளைப்பக்கம் விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வரும்... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேலை பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேலை பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லைங்கிறது இன்னைக்கு நேத்தா இருக்கு,,, முப்பது வருசமா இதேதானே... யாராவது மடை எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காய்ச்சலாவது தலைவலியாவது மொத ஆளா நிப்பாக..."
அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது' என்று நினைத்துக் கொண்டார்.

-'பரியன்வயல்' சே.குமார்