வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: வேண்டும் மழலை..!

Friday, November 20, 2009

வேண்டும் மழலை..!

கிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் இன்று ஆடி வெள்ளி வேறு கேட்கவா வேண்டும். ரமேஷும் அவனது மனைவி பிரபாவதியும் காரில் வந்து இறங்கியதும் கூட்டத்தைப் பார்த்து மலைத்தனர்.

"என்னங்க இன்னைக்கு இவ்வளவு கூட்டம் இருக்கு. "

"ஆடி வெள்ளியில... அதான்... வா நூறு ரூபா டிக்கெட்டுல போயிரலாம்"

"சரிங்க"

சாமி தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து மண்டபத்தில் அமர்ந்தனர்.

அந்தக் கோவிலில் ஒரு அரசமரம் உண்டு. அந்த மரத்தைச் சுற்றி வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தி அங்கு கட்டியிருக்கும் துணியில் முடிச்சிட்டு வந்தால் குழந்தை பிற்க்கும் என்பது ஐதீகம். நடப்பதாகவும் பெண்களிடம் நம்பிக்கை. அதனால் எந்த நேரமும் நான்கைந்து பெண்கள் சுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அதைப் பார்த்த பிரபா "என்ன்ங்க நானும் சுத்திட்டு வாரேன்" என்றாள்.

"சாமிய கும்பிட்டா போதும். இதுபோல மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு..."

"அப்படி சொல்லாதீங்க... அது தெய்வத்தை அவமதிக்கிற மாதிரி... நம்பிக்கையாலதான இவ்வளவு பேர் சுத்துறாங்க. ப்ளீஸ்ங்க்..."

"அறிவியல் எவ்வளவோ வளர்ந்துடுச்சு... இன்னும் மரத்தைச் சுத்துறேன்... மண்ணைத் திங்கிறேன்னு... வா போகலாம்."

"ப்ளீஸூங்க நாலு வருஷமா குழந்தை இல்லாததால நம்ம அப்பா, அம்மா எவ்வளவு வருத்தப் படுறாங்க தெரியுமா... அவங்க ஆசைக்காகவாவது இதை சுத்துற நேரம் குழந்தை பிறக்கட்டும்"

"சரி போ... நான் கார்ல இருக்கேன்"

அவள் சுற்றிவிட்டு காருக்கு வந்தாள். கார் கிளம்பி வீட்டுக்கு வரும்வரை இருவருக்கும் இடையில் எந்த பேச்சும் இன்றி நீண்ட அமைதி நிலவியது. 'சார் கோவமா இருக்காரு போல' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"தம்பி டாக்டர் அன்பு கிளினிக்ல இருந்து பேசுனாங்க. இன்னைக்கு அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தியாமே. டாக்டர் அவசர வேலையா சிதம்பரம் பொயிட்டாராம். நாளைக்கு சாயந்தரம் வரச்சொன்னாங்க. உன் செல்போனுக்கு கிடைக்கலைன்னுதான் இங்க அடிச்சாங்க."

"கோவிலுக்குள்ள இருந்ததால ஆப் பண்ணி வச்சிருந்தேம்ப்பா.




றுநாள் அலுவலகத்தில் இருந்து வந்ததும் இருவரும்  மருத்துவமனைக்கு கிளமபினார்கள்.

அவர்கள் இருவரையும் தனித்தனியே செக்கப் செய்த டாக்டர், "ரெண்டு பேருக்குமே எந்த குறையும் இல்லை. குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் நல்லா இருக்கு. ரெண்டு பேருக்கும் சில மாத்திரைகள்

எழுதித்தாரேன். வாங்கி சாப்பிடுங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறப்ப ரிலாக்ஸா இருங்க. வேற ஒண்ணும் வேண்டாம். சீக்கிரம் உங்களுக்கு குழந்தை உருவாகும்.' என்று கூறினார்.

"நன்றி டாக்டர். நாங்க வர்றோம்"

காரில் வரும்போது "என்னங்க திடீர்ன்னு டாக்டர்கிட்ட..." மெதுவாக கேட்டாள்.

"இல்ல பிரபா, ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அப்பா வந்தப்ப குழந்தை இல்லங்கிறதுக்காக ரொம்ப வருத்தப்பட்டார். உங்க அத்தை ரெண்டு பேருக்கு குழந்தை இல்லையாம். அதுமாதிரி உனக்கும் ஆயிடுமோன்னு புலம்பினாரு. அப்ப எங்ககிட்ட எந்த குறையும் இல்லை சீக்கிரமே குழந்தை பிறக்கும் வீணாவுல மனசைப் போட்டு அலட்டிக்காதிங்கன்னு சொல்லியனுப்பினேன். இருந்தாலும் அவங்ககிட்ட புரூப் பண்ணனுமில்ல அதான் இந்த செக்கப்."

"..........."

"என்ன பேச்சைக் காணோம்..."

"ஒண்ணுமில்லேங்க..."

"அசடு... எதுக்கு இப்ப அழுகை... எல்லாம் நல்லா நடககும்."

ருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை சாப்பிட்டாலும் பிரபா அரசமரத்தை வாராவாரம் சுற்றுவதை நிறுத்தவில்லை.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் காலை எழுந்தவள் தலை சுற்றுவது மாதிரி இருக்குங்க என்றாள். சற்று நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினாள்.

அப்பா அம்மா இருவரும் நெருங்கிய சொந்தகார வீட்டுக் கல்யாணத்துக்கு போயிருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லை. பயந்தவன் அவளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றான்.

அவளை செக்கப் செய்த டாக்டர், அவள் கர்ப்பம் தரித்து இருப்பதாக தெரிவித்தார்.

இருவருக்கும் சந்தோஷம். டாக்டர் கொடுத்த மாத்திரையால்தான் இது சாத்தியம் என்று அவனும் அரசமரத்தை சுற்றியது வீண்போகவில்லை என்று அவளும் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்.

அவர்கள் வாழ்வில் விளக்கேற்றியது அறிவியலா... ஆன்மீகமா...? எதுவாக இருந்தாலும் வீட்டில் மழலை சப்தம் கேட்டால் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக எதுவுமில்லைதானே..!

-சே.குமார்




No comments: